Tuesday, April 1, 2008

பிரபஞ்ச மீட்சி

…இப்படியாகத்தானே அந்த நாய்க்கு நீர் புகட்டியதற்காக அந்தப் பெண் சுவனாதியை அடைந்தார். என்று அந்த மகான் கூறிமுடித்தார்.

வரலாற்றின் சிடுக்குகளில் நுழைந்து எப்போதுமே பயணம் செய்ய பிரியம் கொண்ட ஸ்மீற இந்த சம்பவம் பற்றி ஆய்வதற்கு ஆர்வம் கொண்டான். வரலாற்றின் திரும்புகையினை மறுக்கும் அவன் ஒரு தொகுதி நிகழ்வுகளின் மீள் திரும்புகையினை மட்டுமே நிகழ்வதாக உறுதியாக நம்பினான். அதை வெளியிட தைரியம் இல்லாததால் அதை யாரிடமும் சொல்லவில்லை. வரலாறு என்பது காலம் மற்றும் நேரத்துடன் இணைத்துச் சொல்லப்படுவதால் திரும்பவும் அதே காலமும் நேரமும் திரும்ப முடியாது என்பது அவனது வாதம். இதனால் புதிய சகத்திரத்தில் இம்மாதிரி நிகழ்வுகள் நடந்து அவை சுவனபதி முன்னறிவுப்புக்கான தகுதியை பெற்றிருக்கக் கூடுமா என்ற அவனது தேடுகைக்கு பதில் நீண்டகாலம் கழித்துக் கிடைக்கலாம் என்று அவன் நம்பினான். அந்த நம்பிக்கைக்கு அவனது பூமி சாஸ்திர ஞானத்தை மேற்கோள் காட்டி அது பாலைவனமாகி வருவதாகவும் சொன்னான். ஆனால், அவனது இக்கருத்துக்களை சுவடிகளில் பதிந்து பின்னால் வரலாற்று மாணவர்களுக்கு கொடுக்க அவனுடன் துணைக்கு யாரும் இருக்கவில்லை.
இந்த சம்பவங்களை தனது ஏடுகளில் பதிந்துள்ள புலவர்களும் அந்த சம்பவம் குறிப்பாக எந்த நிலத்தில் நடந்தது என்று குறிக்கவும் இல்லை. அந்த சம்பவங்களை தன் சகாக்களுக்கு சொன்ன முஹம்மத் பின் அப்துல்லாஹ் என்ற நாமம் கொண்ட தூதரும் அது பற்றிக் குறிப்பிடவில்லை. இதனால் சம்பவம் பொய்க்கவும் வாய்ப்பில்லை. அந்த இடம் பூமியில் எங்காவது ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்பது ஸ்மீறவின் அதீத நம்பிக்கை.
தன் பயணப் பொதிகளைக் கட்டிக்கொண்டு மத்திய கிழக்கின் பாலை நிலங்களில் அந்த பாழடைந்து போன கிணற்றினை தேடியலைய ஆரம்பித்தான். தன்னை, அழைத்து வந்து பாலைநிலத்தில் விட்டுவிட்டுப் போவதற்கு முன் அவனது பயண வழிகாட்டி அது வடக்கே இருக்கலாம் என ஹேமம் தெரிவித்தான்.

அந்தக் குறிப்புகளுடன் வடக்கு நோக்கி நாற்பது பேரீத்தம் பழங்களும் மூன்று தோற் பைகளில் ஹாஜர் என்ற ஸ்திரீ தன் புத்திரரான இஸ்மாயீலுடன் நீரைத் தேடியலைந்த பொழுது இறைவனின் அனுக்கிரகத்தால் தோற்றம் பெற்ற ‘ஸம் ஸம்’ சுனையில் படித்த நீரையும் எடுத்துக் கொண்டு தன் பயணத்தை ஆரம்பித்தான்.
பயணிக்கத் துவங்கிய மூன்றாவது நாளில் ஒரு ஈத்தம் புற்றின் அருகில் பாலை நிலத்து ஸர்ப்பங்களை தேடியலைந்து கொண்டிருந்த ஒரு தூர்ந்து போன பர்பர் இனத்தவனை அவன் சந்தித்தான். தனது பயண நோக்கத்தை அவனிடம் சொன்னான். அந்த பர்பர் இனத்தவன் சொன்ன தகவல்கள் அவனுக்கு மேலும் ஆர்வத்தைக் கொடுத்தன. மூன்று தலைமுறைகளுக்கு முந்திய தனது முப்பான் அப்படியான ஒரு கிணற்றில் நீர் அருந்தியதாகவும் அந்த நீரின் அனுக்கிரகத்தால் அவரும் சுவனபதியை அடைய வேண்டும் என்றும் சொன்னான். அவனின் நம்பிக்கையின் சரிபிழையினைத் திருத்துவதற்கு ஸ்மீறவுக்கு நேரம் இருக்கவில்லை. ஆனால், அந்த கிணற்றின் இருப்பு மட்டும் மேலும் அவனுக்கு உறுதியானது.

நாற்பது பேரீத்தம் பழங்களும் நீரும் முற்றுப் பெற்ற பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த ஒரு நாளில் அவனுக்கு களைப்பு மேலிட்டது. கானல்நீரின் பின்னால் அவன் ஓடிக்கொண்டிருந்தான். இத்தனை நாட்கள் கடந்த பின்னும் அந்த கிணற்றின் இருப்பில் அவன் கிஞ்சிற்றும் ஐயம் கொள்ளவில்லை. பாலைவனப் புயல் அவன் மீது மண்ணை வாரியிறைத்து விட்டிருந்தது. தாக மிகுதியால் அவன் நாக்கை தொங்கப் போட ஆரம்பித்திருந்தான். அவன் போகும் திசையின் எதிர்த்திசையில் நிழல்; சரியத் தொடங்கிய பொழுதுகளில் அவனால் தொடந்தும் நடக்க முடியாது போனது. ஒரு நிலையில் அவன் தன்னிலை மறந்து வீழ்ந்தான். உலகமே அவன் முன் இருண்டு போனது.
அவன் கண்ணில் நீர்த்துளிகள் விழுந்தோடியது. கண்களை திறக்காமலேயே தண்ணீர் தண்ணீர் என்று புலம்பினான். அவனது நாவில் நீர் நிறைந்திருந்தது. பால் குடித்த குழந்தையாக கிறங்கிக் கிடந்தான். அப்போதுதான் அவனுக்குப் பொறி தட்டியது. தான் உயிருடன் இருப்பதாகவும் தனக்கு ஒருவர் நீர் கொடுத்திருக்க வேண்டும் என்றும் விளங்கியது.

சட்டெனக் கண் விழித்தான். சூரியன் ஈட்டியளவு உயரத்தில் மறைந்து கொண்டிருந்தது. தன்னைச் சூழ ஆள் அரவம் இல்லாது கண்டு வியந்தான். அவன் பார்வை இத்துப் போன எலும்புகளில் வீழ்ந்தது. அந்த எலும்புகளுக்குள் ஒரு காலுறையினைக் கண்டான். அந்தக் காலுறையினைத் தொட்டுத் தூக்கினான். கைகள் குளிர்மை கண்டன. உற்றுப் பார்த்த போது அது ஈரளிப்பாக இருந்தது.

விரிந்த பாலைநிலத்தின் நெத்திப்பொட்டாக நின்றிருந்த அவன் தன் ஆய்வின் முடிவை எட்டிவிட்டதாக எண்ணினான். இன்றும் ஈரளிப்புடன் இருக்கும் காலுறையும் இத்துப்போன நாயின் எலும்புகளையும் வைத்து தனது ஆய்வின் முடிவை உலகத்துக்குச் சொல்லலாம் என்று எண்ணினான்.

கற்பனையில் திளைத்த அவனது கரத்தில் இருந்த காலுறை சிறுபிள்ளையாக நழுவியது. பூமியினுள் சட்டெனப் புகுந்து கொண்டது. அவன் மணல் பூமியை தோண்ட ஆரம்பித்தான். காலுறை சண்டுபோல பூமியினுள் அகப்படாது சென்று கொண்டிருந்தது.
பின்னொரு நாளில் ஸ்மீறவின் புகைப்படத்துடன் பிரசுரித்து ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

…நண்டாக மறைந்து சென்று அந்தப் பெண்ணின் காலுறை பாலைநிலத்தில் பரிதவித்து நிற்கும் ஒரு ஜீவனை காக்க மீண்டு வரலாம். பாவப்பட்ட ஒரு ஜீவன் மீது ஒரு பெண் காட்டிய கருணைக்குக் கிடைத்த வெற்றிஅ து. இந்த அகிலத்தின் மீட்சிக்கு அடுத்த ஜீவன்களில் காருண்யம் கொள்ளல் அவசியம்.

…முற்றிற்று…



இக்கதை ஜாமிஆ நளீமிய்யாவின் மாணவர் சஞ்சிகையான ‘ராபிதா கலமிய்யா’ என்ற சுவர்ப் பத்திரிகையில் வெளியானது

No comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP