உயிர் ஜீவன்களை மட்டுமே சுமந்து செல்லும் சுழல் இயந்திரத்தின் ஒரு கம்பாட்டுமென்டில் என்னுடைய பெட்டிபடுக்கைகளுடன் சென்று கொண்டிருந்தேன்.
என்னுடைய கம்பாட்மெண்டில் அமர்ந்திருந்வர்கள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. எனக்கு முன்னிருந்த பிரயாணி தனது இருக்கையில் இருக்கவே சிரமப் பட்டுக்கொண்டிருந்தார். அவருடைய முகத்தில் அந்த அங்கலாய்ப்பு முடிவிலியாக வளைந்து நெளிந்துகொண்டிருந்தது.
-‘நீங்கள் வேண்டுமானால் என்னுடைய இருக்கையில் இருக்கலாம்’ என்றேன்.
--‘…….’
---‘அது முடியாது’ என் அருகில் இருந்தவர் சொன்னார்.
தன் பாட்டில் எதிர்ப்புறம் திரும்பியிருந்த அவர் எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.
---‘அது முடியாது’
-‘ஏன்’
---‘தெய்வ சங்கல்ப்பம்’
-‘பைத்தியம், முட்டாள்தனம், நானும் படித்தவன்தான். இப்படி இருப்பதால்தான் நாமெல்லாம் சோம்பேறிகளாக இருக்கின்றோம்….முதலில் முயற்சி, மறுபடியும் முயற்சி, இறுதியில்தான் தெய்வ சங்கல்ப்பம்’
---‘அதெல்லாம் தனியுலகம்’
-‘அதனை என்னால் ஏற்க முடியாது, நிச்சயம் மனித முயற்சிக்கு ஒரு பெறுமானம் இருக்க வேண்டும்’
---‘உன்னுடைய கருத்துக்கள் மிக அந்நியமாக உள்ளது’
-‘இல்லை, நானோ என்னுடைய கருத்துக்களோ அந்நியமானவை அல்ல’
---‘நீ உன்னைத் திருத்திக்கொள்ளும் கணங்கள் உன்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இக்கணத்த பயணத்திரளில் அந்நியப்பட்டு நிற்கும் நீயும் இதில் இணைந்துகொள்வாய்’
மறுபடியும் நான் முன்னிருந்தவரைப் பார்த்தேன். அசௌகரியத்தின் முடிவிலிகளில் அவர் தொடர்ந்தும் தண்டவாளக் குற்றிகள் போல அடுக்கப்பட்டுக்கொண்டிருந்தார்.
அருகே காலியாய் இருந்த இடத்தைச் சுட்டிக்காட்டிய நான்..
-‘என்னுடைய இடத்தில்தான் வந்து அமர முடியாதென்றால் ஏன் நீங்கள் இந்த இடத்தில் அமரக்கூடாது?’
கேட்கக் கூடாத, பேசக்கூடாத வார்த்தையை உமிழ்ந்தவனைப் போல அனைவரும் என்னை உற்றுப் பார்த்தார்கள். ‘மனிதர்கள் தாம் அறியாதவற்றின் எதிரிகள்’ என்ற பழமொழியை என் மனதில் நினைவு படுத்திக் கொண்டேன்.
---‘உமக்கு முறையான அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லை போலும்’
எனக்கு ஆத்திரம் பொத்துக்கொண்து வந்தது. இத்தனை வருட காலமும் நான் கற்ற கல்வியை ஒரு சம்மட்டியாக மாற்றி அவர் மண்டையில் அடிக்க வேண்டும் போன்றிருந்தது.
---‘நீ இன்னும் உன்னைப் புரிந்து கொள்ளவேயில்லை’ என்றார் என் அருகில் இருந்தவர்.
-‘ஜயா!, நீங்கள் ஏன் என்னையே பகைக்கிறீர்கள். நானும் உங்களைப் போலவே ஒரு பயணி, என் இடம் வரும் வரையில் இந்த வண்டியில்தான் பணயிக்க வேண்டும். ஒரு மனிதனுக்கு நல்லது செய்ய நினைத்தது ஒரு தவறா?’
---‘செய்ய வேண்டிய இடங்களில் செய்ய வேண்டும், இப்போதல்ல’ என்று சொல்லிய அவர் தொடர்ந்தும் எதிர்ப்புறம் திரும்பி தன் சோலியில் கவனம் கொண்டார். நானும் என்னையே சாந்தப்படுத்தியவனாக சற்று தூங்கலாம் என்று நினைத்தேன். அத்தருணம் நான் இருந்த கம்பாட்டுமெண்டில் புதிதாக ஒரு மனிதர் வந்தார். என் முன் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார். அவர் என்னைப் பார்த்து எதையோ சொல்ல வருபவர் போல எழுந்து வந்து என் அருகில் இருந்த யன்னலைத் திறந்தார்.
“இந்தப் பெயருடைய ஸ்திரீக்கும் இந்தப் பெயருடைய தந்தைக்கும் பிறந்தவனாகிய நீ சாந்தப்பட்ட ஆத்மாவாக மாறிவிடு, உன் இரட்சகன் ஒருவன், அவனே அல்லாஹ{. உன் தலைவர் முஹம்மது. உன் இரட்சகன் யாரென்றும் உன் தலைவர் யாரென்றும் கேட்பவர்களிடம் இதைச் சொல்லிவிடு”
என்ற அசரீரிகள் ஒலித்தன.
நான் புதினப்பட்டேன். என் அருகில் இருந்தவரைப் பார்த்தேன்.
---‘இந்த வண்டியில் ஏறியதும் நீயும் இப்படிச் செய்திருந்தால் இப்படிச் சொல்லுமாறு உன்னையும் கேட்டிருப்பார்கள்……இனியாவது புரிந்துகொள்,
…நீ நித்திய புறப்பாட்டில் இருக்கின்றாய்'
..........முற்றிற்று...........
இந்தக் கதை ஜாமிஆ நளீமிய்யாவின் மாணவர் வெளியீடான 'ராபிதா கலமிய்யா' என்ற சுவர்ப்பத்திரிகையில் வெளியானது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment