‘கலைத்துவிட முடியாத நிஷ்டையில் இருந்து அவர் இன்னமும் மீள எழாததால் அவரை மக்கள் விகாரையுடன் நிறுத்திவிட்டு அடிக்கடி சென்று தரிசித்து வந்தனர். நிஷ்டை கலைந்து நடமாடினால் இப்படித்தான் இருக்கும் என்று பார்க்க பிக்குகளை தோற்றுவித்தனர். இதனால், அவர்களையும் நிஷ்டை கலையாத மடத்திலேயே வைத்தனர். கலைத்துவிட முடியாத நிஷ்டை நிலையாத எய்துவிட அவர்களும் பிரயத்தனம் செய்தனர்.’
என்று சிந்தனை செய்தவாறு; அமைதியே குடிகொண்ட கண்களைக் கொண்ட அந்த மனிதர் அரச மரத்தை நோக்கி தன் கவனத்தைத் திருப்பினார்.
‘காற்றைக் கடவுள் வெற்றுக் கண்களுக்குப் புலப்படாத நீராக்கி அதனை போதி மரத்தினூடாக ஓட விடுவதால் எழும் சப்தமே போதி மரம் புன்னகைத்து நிற்கும் காட்சி’ என்று அவர் எண்ணிக்கொண்டார்.
இதனை நினைத்து ஒரு புன்னகையையும் வாயு மண்டலத்தில் உலவவிட்டார். அது நிஷ்டை கலையாத அவரின் முகத்தில் ஒட்டிக்கொண்டது. மக்கள் பக்தியுடன் கூறினர்.
‘சாது..சாது..சாது’
விகாரையை விட்டு வெளியேறிய அமைதியே குடிகொண்ட கண்களைக் கொண்ட அந்த மனிதர் விகாரையை உண்டியலைக் கண்டார். உண்டியலைச் சூழ விகாரைக்கு வரமுடியாதவர்கள் விட்டெறிந்த நாணயக் குற்றிகளையும் கண்டார். ‘கலைத்துவிட முடியாத நிஷ்டையை நாணயக் குற்றிகளின் சேர்க்கையினால் எழும் நாதத்தினால் கலைக்க இயலும் என்று நினைத்து என்றோ ஒரு நாள் கடந்துவிட்ட வரலாற்றின் ஒரு பக்கத்தின் வலது பக்க மேல் மூலையில் ஒருவர் செய்துவிட்ட முயறசியாக அது அமைந்திருக்க வேண்டும். கோடிக்கணக்கான நாணயக் குற்றிகளின் சேர்க்கை நாதம் இடிமுழக்கம் போல எழுந்து நிஷ்டையை கலைத்துவிடும் என்று எண்ணியிருக்கலாம்.’ என்று நினைத்துக் கொண்டார்.
சிதறிக்கிடந்த நாணயங்களை பொறுக்கி எடுத்தார். என்றுமே திறந்த வாயுடன் இருந்த உண்டியலில் போட்டுவிட நினைத்து அடி எடுத்து வைத்தார்.
பதபதப்பான ஒரு கரம் பற்றிப்பிடிக்க நின்றுவிட்டார். முதுமை ஏறிவிட்ட சாயம் போய்விட்ட ஒருத்தி. களங்கமில்லை என்பதற்காக வெள்ளையுடுத்திருந்தாh. கட்டை விரலும் சுட்டுவிரலும் அவரது கரத்தைப் பற்றியிருக்க ஏனைய விரல்கள் பற்றற்று நீண்டு வளைந்திருந்தது. நிஷ்டை நிலையில் இருப்பவரின் வலது கரமும் அப்படித்தான் இருக்கிறது என்பது சுருக்கென்று தோன்றி மறைந்தது.
‘மகன், மடியில் முடிஞ்சி வச்சிருந்த காசி தொலஞ்சிட்டுது. ஊருக்கு போகவேணும், பஸ்ஸ{க்கு காசில்ல, கொஞ்சம் காசி தாங்க மகன், ஆண்டவன் புன்னியம் தருவான்’
வசியம் செய்யப்பட்டவர் போல கையிலிருந்த காணிக்கைகளை அவரின் இரண்டு கைகளிலும் தினித்தார். அவளின் நன்றியை எதிர்பாராமல் திரும்பிய அவருக்கு கலைத்துவிட முடியாத நிஷ்டையில் இருந்தவரின் மயானக் கண்கள் மலர்ந்து மூடியதான உணர்வு ஏற்பட்டது. நிச்சயமாக கண்கள் திறந்தன என்று அவர் மனது சொன்னது. உள்ளிருந்து வந்த வார்த்தைப் பிரவாகம் மடையுடைத்த போது…
‘தெய்வமே! உன் நிஷ்டையை இப்படித்தான் கலைக்க வேண்டுமா?’
தன் இரு கைகளையும் உயரத் தூக்கி கை கூப்பினார். பின்னால் இருந்து யாரோ தட்டுவது போன்ற ஓரு உணர்வு.
‘இஞ்ச உள்ள போய்க் கும்புடு, பைத்திக் காரனைப் போல ரோட்டில நின்டு கத்துறாய். போ போ வழியில் நின்டு ரோட்ட மறிக்காத’
என்று நகர்ந்தார். ஒரு காவல் அதிகாரி.
அமைதியே குடிகொண்ட கண்களைக் கொண்ட அந்த மனிதர் திரும்பிப் பார்த்தார். கலைத்துவிட்டதாகத் தோன்றிய நிஷ்டை கலைக்க முயடியாததாக மாறிவிட்டதாகத் தோன்றியது.
இரண்டு அடிகள் சென்றுவிட்டு கடைசியாக திரும்பிப் பார்த்தார். யாரோ சிந்திய புன்னகை நிஷ்டை கலையாத அவரின் முகத்தில் முட்டி மோதி ஒட்டியிருக்க வேண்டும்.
மக்கள் சொன்னார்கள்.
சாது…சாது… சாது..
சுபம். மங்களம்.
2004.04.02
..........................................................
இக்கதை ஜாமிஆ நளீமிய்யாவின் மாணவர் சஞ்சிகையான ‘ராபிதா கலமிய்யா’ என்ற சுவர்ப் பத்திரிகையில் வெளியானது.
No comments:
Post a Comment