திருவலையில் தேங்காய் துருவிக் கொண்டிருந்த தனது பிரியசகி சந்திரலேகாவைப் பார்த்து அண்ட சராசரங்களின் கலைகளையும் கற்றுத் தோந்த கலாநிதி நந்தலாலா தரையில் அமர்ந்தவராக சுரைக்காய் விதையின் தோலையுரித்து உள்ளிருந்த பருப்பை இரண்டாக்கி ஒன்றைத் தன் சகியின் வாயிலும் மற்றயதை தன் வாயிலும் இட்டுக்கொறித்தவராக,
-‘என்னுடைய வாழ்வில் புலிகளும், எலிகளும் பெரும் திருப்பத்தையே கொண்டுவந்தன, உனக்கு அது தெரியுமா?’
--“அது நமது கலியாணத்துக்கு முந்தி நடந்திருக்கும்”
-‘ஆமாம், நீ சரியான புத்திசாலி, அழகியும் கூட’
--“நான் எப்பவுமே அழகுதான்”
-‘கலியாணத்துக்குப் பின்னர் என்று பார்த்தால் நான் அந்த வாக்கியத்தை இப்படிச் சொல்லியிருக்க வேண்டும்’
--“எப்படி”
-‘என்னுடைய வாழ்வில் புலிகளும், எலிகளும், பிரியசகியும் புத்திசாலியும் அழகியும் என் மனைவியுமாகிய நீயும் என்னுடைய வாழ்வில் பெரும் திருப்பங்களைக் கொண்டுவந்தவர்கள் அது உனக்குத் தெரியுமா?’
--“தெரியாது!, சுரக்காயை சுண்டல் செய்தா சாப்பிடுவீங்கதானே?”
-‘ஓம், வரிச்சட்டை போட்ட புலிகளும், கறுப்பு எலியும் என் எதிர்காலத்திற்கே உலைவைத்தன’
--“அப்ப நான்!”
-‘இதுவரைக்கும் அப்படியில்லை..ஹா..ஹா..’
--“எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்”
-‘கலாநிதி நந்தலாலாவாகிய எனக்கு ஒரு குறுகிய வாலும், நான்கு கால்களும், பத்துப் பதினைந்து மீசைகளும் உடைய ஒரு கறுப்பு எலியால் சதி பின்னப்பட்டது. பல வருடங்களுக்கு முன்னர் அது எனது உயர்கல்வி ரிஸால்ட் சீட்டை கடித்துக் குதறியது’
--“ம்ம்..புலிகள் என்னசெய்ததாம்”
-‘வாலில்லாப் புலிகள் என் தகப்பனாரை ரவை நகங்களால் கிழித்துக் குதறின’
--“ம்.. இந்தாங்க@ கறிக்கு உப்புக் காணுமா பாருங்க…”
-‘போதும், ஆக நந்தலாலா சொல்வது இதுதான். புலிகளும், எலிகளும் நமது எதிர்காலத்தையும், இருப்பையும் குறிவைக்கின்றன’
--“அதை ஏன் எழும்பி நின்டு சொல்லுவீங்களாம்! இருந்து சொல்லலாமே!”
-‘எலிகளும் புலிகளும்…”
--“சாப்பாட இப்ப வைக்கவா, சுனங்கனுமா?”
-‘சுனங்கட்டும்’
--“சரி..
என்று கூறிய பரியசகி சந்திரலேகா அப்பால் சென்று விட்டாள். நந்தலாலாவின் கருத்துக்களை அவள் சட்டை செய்யவேயில்லை.
பின்னொரு பொழுதில் அண்ட சராசரங்களின் கலைகளையும் கற்றுத்தேர்ந்த கலாநிதி நந்தலாலாவின் கையில் மலத்தீன் பையுடன் எறும்புப் புற்றுக்களைத் தேடி அவற்றை துவம்சம் செய்து கொண்டிருந்தார்.
பிரியசகியும் புத்திசாலியும் அழகியுமான அவரது மனைவி சந்திரலேகா தன் பால்ய சிநேகிதியும் உபாத்தியாயினியுமான லோகமாதாவை வீட்டினுள் வைத்துப் பேசிக் கொண்டிருந்தாள். லோகமாதாவுக்கு விலையேறிவிட்ட பால் சுரணம் இட்டுக் கலக்கிய தேயிலையும், ரூபா 22 பெறுமதியான சாக்குலேட்டு பிஸ்கட்டுகளும் சாப்பிட வைத்திருந்தாள். லோகமாதா அதிகம் சாப்பிடக் கூடாது என்று கலாநிதி நந்தலாலா இறைவனைத் தொழுதார்.
லோகமாதா பின்வருமாறு திருவுளமானாள்
---“ஸ்கூலுக்கு வந்த விஞ்ஞானப் பரிசோதனைப் பொருட்களையெல்லாம் மாத்தின பிறகுதான் நமக்கு அனுப்பியிருக்காங்க, சில பொருட்களை எடுத்துவிட்டார்கள். அவர்களை நம்பவே முடியாது”
சந்திரலேகா சொன்னாள்
--“அதுதான் பாரேன், இந்த மனிசன் படிக்கிற காலத்திலயும் இந்த புலிகளும் எலிகளும் தொல்லை குடுத்திருக்காங்க, அவங்க நம் சமூகத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிறாங்க, இப்ப படிப்பு விசயத்திலயும் கை வைக்கிறாங்க”
அண்ட சராசரங்களின் கலைகளையும் கற்றுத் தேர்ந்த கலாநிதி நந்தலாலா சிரித்துக்கொண்டு தொடர்ந்தும் எறும்புகளுக்கு மலத்தீன் தெளித்துக்கொண்டிருந்தார்.
‘அது என் பிரிய சகியும் புத்திசாலியும் அழகியுமான என் மனைவியின் கூற்று’
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment