Monday, March 31, 2008

நந்தலாலா, சந்திரலேகா, லோகமாதா

திருவலையில் தேங்காய் துருவிக் கொண்டிருந்த தனது பிரியசகி சந்திரலேகாவைப் பார்த்து அண்ட சராசரங்களின் கலைகளையும் கற்றுத் தோந்த கலாநிதி நந்தலாலா தரையில் அமர்ந்தவராக சுரைக்காய் விதையின் தோலையுரித்து உள்ளிருந்த பருப்பை இரண்டாக்கி ஒன்றைத் தன் சகியின் வாயிலும் மற்றயதை தன் வாயிலும் இட்டுக்கொறித்தவராக,

-‘என்னுடைய வாழ்வில் புலிகளும், எலிகளும் பெரும் திருப்பத்தையே கொண்டுவந்தன, உனக்கு அது தெரியுமா?’
--“அது நமது கலியாணத்துக்கு முந்தி நடந்திருக்கும்”
-‘ஆமாம், நீ சரியான புத்திசாலி, அழகியும் கூட’
--“நான் எப்பவுமே அழகுதான்”
-‘கலியாணத்துக்குப் பின்னர் என்று பார்த்தால் நான் அந்த வாக்கியத்தை இப்படிச் சொல்லியிருக்க வேண்டும்’
--“எப்படி”
-‘என்னுடைய வாழ்வில் புலிகளும், எலிகளும், பிரியசகியும் புத்திசாலியும் அழகியும் என் மனைவியுமாகிய நீயும் என்னுடைய வாழ்வில் பெரும் திருப்பங்களைக் கொண்டுவந்தவர்கள் அது உனக்குத் தெரியுமா?’
--“தெரியாது!, சுரக்காயை சுண்டல் செய்தா சாப்பிடுவீங்கதானே?”
-‘ஓம், வரிச்சட்டை போட்ட புலிகளும், கறுப்பு எலியும் என் எதிர்காலத்திற்கே உலைவைத்தன’
--“அப்ப நான்!”
-‘இதுவரைக்கும் அப்படியில்லை..ஹா..ஹா..’
--“எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்”
-‘கலாநிதி நந்தலாலாவாகிய எனக்கு ஒரு குறுகிய வாலும், நான்கு கால்களும், பத்துப் பதினைந்து மீசைகளும் உடைய ஒரு கறுப்பு எலியால் சதி பின்னப்பட்டது. பல வருடங்களுக்கு முன்னர் அது எனது உயர்கல்வி ரிஸால்ட் சீட்டை கடித்துக் குதறியது’
--“ம்ம்..புலிகள் என்னசெய்ததாம்”
-‘வாலில்லாப் புலிகள் என் தகப்பனாரை ரவை நகங்களால் கிழித்துக் குதறின’
--“ம்.. இந்தாங்க@ கறிக்கு உப்புக் காணுமா பாருங்க…”
-‘போதும், ஆக நந்தலாலா சொல்வது இதுதான். புலிகளும், எலிகளும் நமது எதிர்காலத்தையும், இருப்பையும் குறிவைக்கின்றன’
--“அதை ஏன் எழும்பி நின்டு சொல்லுவீங்களாம்! இருந்து சொல்லலாமே!”
-‘எலிகளும் புலிகளும்…”
--“சாப்பாட இப்ப வைக்கவா, சுனங்கனுமா?”
-‘சுனங்கட்டும்’
--“சரி..
என்று கூறிய பரியசகி சந்திரலேகா அப்பால் சென்று விட்டாள். நந்தலாலாவின் கருத்துக்களை அவள் சட்டை செய்யவேயில்லை.
பின்னொரு பொழுதில் அண்ட சராசரங்களின் கலைகளையும் கற்றுத்தேர்ந்த கலாநிதி நந்தலாலாவின் கையில் மலத்தீன் பையுடன் எறும்புப் புற்றுக்களைத் தேடி அவற்றை துவம்சம் செய்து கொண்டிருந்தார்.
பிரியசகியும் புத்திசாலியும் அழகியுமான அவரது மனைவி சந்திரலேகா தன் பால்ய சிநேகிதியும் உபாத்தியாயினியுமான லோகமாதாவை வீட்டினுள் வைத்துப் பேசிக் கொண்டிருந்தாள். லோகமாதாவுக்கு விலையேறிவிட்ட பால் சுரணம் இட்டுக் கலக்கிய தேயிலையும், ரூபா 22 பெறுமதியான சாக்குலேட்டு பிஸ்கட்டுகளும் சாப்பிட வைத்திருந்தாள். லோகமாதா அதிகம் சாப்பிடக் கூடாது என்று கலாநிதி நந்தலாலா இறைவனைத் தொழுதார்.
லோகமாதா பின்வருமாறு திருவுளமானாள்
---“ஸ்கூலுக்கு வந்த விஞ்ஞானப் பரிசோதனைப் பொருட்களையெல்லாம் மாத்தின பிறகுதான் நமக்கு அனுப்பியிருக்காங்க, சில பொருட்களை எடுத்துவிட்டார்கள். அவர்களை நம்பவே முடியாது”
சந்திரலேகா சொன்னாள்
--“அதுதான் பாரேன், இந்த மனிசன் படிக்கிற காலத்திலயும் இந்த புலிகளும் எலிகளும் தொல்லை குடுத்திருக்காங்க, அவங்க நம் சமூகத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிறாங்க, இப்ப படிப்பு விசயத்திலயும் கை வைக்கிறாங்க”

அண்ட சராசரங்களின் கலைகளையும் கற்றுத் தேர்ந்த கலாநிதி நந்தலாலா சிரித்துக்கொண்டு தொடர்ந்தும் எறும்புகளுக்கு மலத்தீன் தெளித்துக்கொண்டிருந்தார்.
‘அது என் பிரிய சகியும் புத்திசாலியும் அழகியுமான என் மனைவியின் கூற்று’

Sunday, March 30, 2008

மரணம் தழுவாத உறக்கம்

ஒர் ஆய்வின் இறுதிப் பத்திகள் பின்வருமாறு முற்றுப் பெறுகின்றன.

‘மரணத்தின் விரிந்த கிளைகளில் உறக்கம் துயில் கொள்வதாகவும் அது அஸ்தமனத்தின் பிந்திய கருக்கலில் மனிதனுடன் சேர்வதாகவும் சேர்மானம் வலுக்கும் போது அது மரணமாக ஜனிப்பதாகவும் சேர்மானம் வலுக்காத கிளை உறக்கம் பிரிகை கொண்டு மரணத்தின் விரிந்த கிளைகளில் சென்று துயிலத் துவங்குவதாகவும் அதனால் மனித சஞ்சாரத்தின் இருப்பு தொடர்வதாகவும் அதற்காகவே இறைவன் துதிக்கப்படுகின்றான் என்றும் இந்த ஸ்தோத்திரத்தின் (ஸ்தோத்திரம் ஆய்வின் முந்திய பத்திகளில் கூறப்பட்டுள்ளது) வியாக்கியானம் சொல்கிறது.

வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையே உறக்கம் துலங்காத பிரிகோடாக வரையப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அது வாழ்வுடன் பிணைந்து கொள்ள செய்யும் பிரயத்தனங்களில் முடிச்சு அவிழும் பிணைப்புகள் வாழ்வாக ஜனிப்பதாகவும் உறக்கம் மரணத்தின் கிளைகளில் சாந்தி கொள்வதாகவும், ரௌத்தரம் கொண்ட அதன் பிரயத்தனங்களின் முடிச்சுகள் சிலபோது சாத்தியப்பட்டு விடுவதாகவும் அதன் ஜனனமும் மரணமே என்றும் அந்த ஸ்தோத்திரத்தின் மற்றுமொரு வியாக்கியானம் சொல்கிறது."

“துயிலை ஆசுவாசப்படுத்தி அதனை மரணத்தின் கிளைகளில் மீளவும் சாந்தி கொள்ளச் செய்யும் சர்வலோகத்து அதிபதிக்கு புகழாரம்.”
முற்றும்.

இந்த ஆய்வினை சர்வதேச வாசகர்களாகிய எமக்கு விட்டுச் சென்றுள்ள 'பின் டீன் பைசு' அவரது நாளேடுகளில் இந்த ஆய்வுக்குறிப்புகளை அட்சரங்கள், இலக்கங்கள் மற்றும் கோடுகளின் துணைகொண்டு குறித்து வைத்துள்ளார். தனது ஆய்வினைப் பூரணப்படுத்திவிட்டதாக எண்ணம் கொண்டு உசாத்துணையாகாத குறிப்புகளை எரிப்பதற்கு முன் மேலோட்டப் பார்வையொன்றை அவற்றின் மீது செலுத்தினார். தனது ஆய்வின் முற்றுகையினை கேள்விக்குள்ளாக்குவதோடு அதனை வேறுபரிமாணத்துக்கு இழுத்துச் செல்லும் மற்றுமொரு குறிப்பு இருக்கக் கண்டார். குறிப்புகளை கோர்வை செய்கையில் தான் அலட்சியமாக இருந்ததை எண்ணி தன்னை நொந்து கொண்டார்.

மரணம் தழுவிக்கொள்ளாத உறக்கம் பற்றிய துணுக்குகள் அவரது பார்வையை விட்டு நழுவிச்சென்றுள்ளதை எண்ணி கவலை கொண்டார். அந்த குறிப்புகளை தான் எங்கிருந்து பெற்றார் என்ற ஞாபகங்களை மீட்பது அவருக்கு கஷ்டமாக இருந்தது. அவை வேத நூல்களில் கிடைக்கலாம் என்று அவரது நண்பர் ஒருவர் அவருக்கு சொன்னது நினைப்புக் கொள்ளவே வேதநூல்களின் பக்கங்களில் தனது முடிவுறாத ஆய்வினை முழுமை பெறச் செய்யும் வைராக்கியத்துடன் தேடலானார். கி. பி 600 களின் பிற்பகுதிகளில் தோல், மரப்பட்டைகள், மிருகங்களின் எண்புகள் என்பவற்றில் சுவடுகளாகப் பதியப்பட்ட அறபானிய வேதநூலான புர்கானில் அக்குறிப்புகள் விரவிக் கிடப்பதாக அறிந்து அதனை தேடிப்படிக்கலானார். சுழிவுகள் கொண்ட அறபானிய அக்ஷரங்கள் அவரை புது உலகங்களுக்கு அழைத்துச் செல்வதான உணர்வு மேலிட்டது.

நாட்கள் செல்லச் செல்ல புர்கான் அவரை வசீகரம் செய்து கொண்டே வந்தது. அதனை படிக்கப்படிக்க அதன் வசீகர சக்தி கூடிவருதாக அவர் எண்ணினார். அறபானிய மொழியில் அமைந்த புர்கானின் அர்த்தங்கள் கிளைவிட்டு விரிந்து போவதை அவர் கண்டுகொண்டார். புர்கானின் இந்தியப் பதிப்பு ஒன்றினை புத்தகக்கடையொன்றில் கண்டு அதனை பணம் கொடுத்து வாங்கும்போது புத்தகக்கடை உரிமையாளன் அதன் ஒரு அக்ஷரத்தினை படிப்பது பத்து நன்மைகளை தருவதாக இறைதூதர் சொல்லியுள்ளதாக கூறினான். அதனை விளக்கவுரை ஒன்றின் துணையுடன் வாசிக்குமாறும் அவன் ஆலோசனை கூறினான். கூடவே வரலாற்றாசியர் பின் கஸீர் என்பவரின் பல பாகங்கள் கொண்ட விளக்கவுரை ஒன்றைக் அவரிடம் தந்துவிட்டு புர்கானின் வியாக்கியானம் எல்லையற்று விரியக்கூடியது என்றும் அதனை ஏழுகடல்களை மையாக்கி, உலகில் கிளைத்துப் பரம்பி நிற்கும் மரங்களை ஏழுத்தானியாக மாற்றினாலும் அதற்கான வியாக்கியானத்ததை எழுதித் தீர்த்துவிட முடியாது என்று சொல்லிச் சென்றான்.

மரணம் தழுவாத உறக்கம் ஒலிப்பிரிகைகளின் தாக்கம் கொள்ளாதது. அது செவிப்புலனை அர்த்தமற்றதாக்கிவிடுகிறது. அது மனிதனை இறுகத் தழுவிக் கொள்ளும்போது அந்த அரவணைப்பில் தாயின் பாசம் கசிவதால் எவரும் அபயமளிக்கப்பட்வர்களாக ஆயாசம் கொண்டு துயில் கொண்டுவிடுகின்றனர். மரணம் தழுவாத உறக்கம் தழுவியவர்களை மண் கூட புசிப்பதில்லை என்றும், இறை அனுக்கிரகம் கிடைக்கப்பெற்ற சில யுவர்களும் ஒரு காவல் நாயும் மாத்திரமே இது கால வரை அவ்வுறக்கத்தை சுகித்தவர்கள் என்று கூறும் பின் கஸீரின் குறிப்புகள், அவர்கள் மூன்று சகத்திரங்களுட்பட மேலும் பத்துக்குறைய நூறு ஆண்டுகள் துயில் கொண்டதாகவும் துயில் கலைந்து கண் விழித்தபோது தாம் களைப்பு மேலிட்டு ஒரு சில நாட்கள் வரை அயர்ந்து தூங்கிவிட்டதாக தமக்குள் வியந்து பேசிக் கொண்டதாகவும் அவர்கள் பற்றிய சேதி வெளியில் கசிந்து உலகமே வியந்து நின்ற ஒரு பொழுதுகளில் அவர்கள் தாம் துயில் கொண்ட குகையினுள் சென்று மறைந்து கொண்டதாகவும் அதன் பின் அவர்கள் திரும்ப வரவேயில்லை என்றும் குறிப்புகள் கூறுகின்றன.

இவ்வாறான அநுக்கிரகம் அந்த யுவர்களுக்கு கிடைத்ததன் சூட்சுமத்தினை அறிய ஆவல் மேலிட்டு புர்கானை மேலும் வாசிக்கலானார். பல வருடங்களாக அதனை மீட்டி மீட்டி வாசிப்பதிலேயே காலம் கழித்தார். மரணமும் வாழ்வும் புர்கானில் பக்கங்களில் சிதறவிடப்பட்டிருப்பதனையும் ஆனாலும் அவை எப்போதும் சேர்ந்தே இருப்பதுவும் கண்டு 'வாழ்வும் மரணமும் பூமியல் சிதற விடப்பட்டிருப்பதாகவும் அதில் தடுக்கிவீழ்பவர்கள் ஜனனத்தையும் மரணத்தையும் கண்டு கொள்வதாகவும், ஒரு புதிய தகவல் துணுக்கினை தனது குறிப்புகளில் சேர்த்துக் கொண்டார். தன் வாழ்நாளின் அந்திமக் காலம் வரை மரணம் தழுவாத உறக்கம் ஒரே ஒரு இடத்தில் புர்கானில் இடம் பெறுவதன் சூட்சுமம் அவருக்கு பிடிபடவேயில்லை. அவர் எழுதிய முற்றுப்பெறாத ஆய்வினை புதிய தகவல்களுடன் இணைத்து வெளியிட அவரால் முடியாமல் போய்விட்டது. அவர் புர்கானை ஆய்வு செய்து கொண்டிருந்த காலங்களில் மக்கள் அவரை மறந்துவிட்டிருந்தனர். அவரது மரணம் பற்றிய செய்திகள் கூட உறவினர்கள் வரை மட்டுமே தெரிந்திருந்தது.

'பின் டீன் பைசு' கடைசி வரை தன்னுடன் வைத்திருந்த குறிப்புப் புத்தகத்தினை படிப்பதற்கு யாரும் இல்லாதபடியால் அதனை நூதன சாலையின் கையெழுத்துச் சுவடிக் கூடத்துக்கு அவரது உறவினர்கள் தந்திருந்தனர். அது மறு பதிப்புப் பெறுவதற்கான முஸ்தீபுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அவரது குறிப்புப் புத்தகத்தின் கடைசிப்பக்கங்களில் மரணம் தழுவாத உறக்கம் என்ற வார்த்தைகள் பல தடவைகள் ஸ்தோத்திரம் போன்று எழுதப்பட்டிருப்பதும் அதன் இறுதியில் நடுக்கம் கொண்டம் கைகளால் எழுதப்பட்ட குறிப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டன. முழுமை பெறாத அவரது ஆய்வின் இறுதி வாசகங்களாக அவை இருக்கக் கூடும்.

“.......மரணம் தழுவாத உறக்கம் ஒரு வாசிக்கப்படாத புத்தகம். அது வாசிக்கப்பட வாசிக்கப்பட வாழ்வின் பல பரிமாணங்களும் அதன் நிலையற்ற தன்மையும் புரியப்படுகின்றது. அதன் வாசிப்பின் எல்லையில் சுகந்தம் தரும் உண்மை ஒன்று இருப்பதனை யாரும் புரிந்து கொள்வர். மரணம் தழுவாத உறக்கம் என்ற நூல் வாசிக்கப்பட வாசிக்கப்பட உறக்கம் நீங்கிய வாழ்வு பிறக்கிறது அதுவே மரணம் தழுவாத வாழ்வாக உருக்கொள்கிறது.

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP